🗂️ சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை 2026

50 பிரிவுகளில்
500+ வாக்குறுதிகள்

தி.மு.கழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள தொலைநோக்குத் திட்டங்களையும், மக்கள்நலத் திட்டங்களையும் இங்கே காணலாம்

தேர்தல் அறிக்கை PDF (2026)

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
🏛️
11 வாக்குறுதிகள்

மாநில உரிமைகள்

1. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழு பரிந்துரைகளை, நாடு தழுவிய விவாதப் பொருளாக்கி, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிலைநாட்டிட, உடன்பாடான கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழகம் மேற்கொள்ளும்.
2. ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஆங்கிலமும், தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும்.
+9 மேலும்...
⚖️
9 வாக்குறுதிகள்

சமூகநீதி

1. இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
2. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநாட்டிட இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
+7 மேலும்...
🎭
7 வாக்குறுதிகள்

கலை மற்றும் பண்பாடு

1. நாட்டுப்புறக் கலைகள், வாழ்வியல் மரபுகள், கட்டடக்கலை, தொல்லியல் மற்றும் இலக்கியத் தரவுகளை ஒருங்கிணைக்கப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய “ஒருங்கிணைந்த பண்பாட்டு ஆணையம்” (Heritage Commission) அமைக்கப்படும்.
2. நாட்டுப்புறக் கலைத்துறை, கலைப் பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் ஒருமுகப்படுத்தப்படும்.
+5 மேலும்...
📜
10 வாக்குறுதிகள்

தமிழ் வளர்ச்சி

1. உயர்தனிச் செம்மொழியாம் அன்னைத் தமிழின் சிறப்பினைப் போற்றிடும் வகையில் பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு ‘செம்மொழி மாநாடு’ சென்னையில் சிறப்பாக நடத்தப்படும்.
2. கலைச்சொல்லாக்க முயற்சியின் ஒரு பகுதியாக ஒவ்வொரு துறைசார்ந்தும், பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளிவரும் முக்கியமான கட்டுரைகள் உடனுக்குடன் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
+8 மேலும்...
🏺
7 வாக்குறுதிகள்

தொல்லியல்

1. மைசூர் கல்வெட்டுத் தரவுகளை ஆவணப்படுத்துதல்: மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கிளை அலுவலகத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுப் படிகள் (Estampages) பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கல்வெட்டுகளை, நீதிமன்ற ஆணைப்படி இந்தியத் தொல்லியல் துறையிடமிருந்து பெறப்படும். இவற்றை முழுமையாக ஆய்வு செய்து, உரிய வரலாற்று விளக்கங்களுடன் தமிழ்நாட்டுக் கல்வெட்டுப் பெருங்களஞ்சியம் எனும் பெயரில் நூல் வரிசைகளாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
2. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ள கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை விரைவில் வெளியிட ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
+5 மேலும்...
🤝
6 வாக்குறுதிகள்

இலங்கைத் தமிழர் நலன்

1. 2019-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டைக் கைவிடுமாறு ஒன்றிய அரசை தி.மு.க. வலியுறுத்துகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களிடம் கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி போன்றவற்றைக் கோராமல் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையைச் சான்றாதாரமாக ஏற்க ஒன்றிய அரசை தி.மு.க. கோருகிறது.
2. இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அதனைச் சரிபார்த்து மேல் நடவடிக்கை எடுத்திடவும் மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க தி.மு.க. கோருகிறது.
+4 மேலும்...
🌍
5 வாக்குறுதிகள்

அயலகத் தமிழர்கள் நலன்

1. அயலக வாழ் தமிழர்கள் நம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். பல்வேறு வகையான திறமை வாய்ந்த தொழிலாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் முதலீட்டாளர்கள் என இலட்சக்கணக்கானோர் தங்கள் தாய்நாட்டையும் தங்கள் பணியாற்றும் நாட்டையும் வளப்படுத்தி வருகின்றனர். அவர்களது பணிக்காலத்திலும் அயல்நாட்டு பணி காலத்திற்குப் பின்னரும் பலனளித்து பாதுகாக்கும் வண்ணம் ஒரு விரிவான வெளிநாடு வாழ் தமிழர் நலக் கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.
2. அயலக வாழ் தமிழர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கேரள அரசின் NORKA Roots மாதிரியில் அதன் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
+3 மேலும்...
🌾
36 வாக்குறுதிகள்

வேளாண்மை மற்றும் உழவர் நலன்

1. இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
2. பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
+34 மேலும்...
💧
5 வாக்குறுதிகள்

நீர் மேலாண்மை

1. ஊரகப் பகுதிகளில் மாபெரும் நீர் மேலாண்மைத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் நீர்நிலைகள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு புனரமைக்கப்படும். அவற்றில் உள்ள மதகுகள், கலுங்குகள் ஆகியவைச் சீர்செய்யப்படுவதுடன், நீராடுதுறை போன்ற கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
2. வேளாண்மைக்கு இன்றியமையாததாகத் திகழும் நீர் நிலைகளிலும், அமைப்புகளிலும் ஆகாயத்தாமரை போன்ற தாவர இனங்களின் பெருக்கம் சீரான நீரோட்டத்திற்கும், பாசனத்திற்கும், பெரும் சிக்கலாக உருவாகி உள்ளது. இவற்றைத் தொடர்ந்து அப்புறப்படுத்தி நீரோட்டத்தைச் சீராக்குவோம். இதன் வாயிலாக வாய்க்கால்கள், குளம், குட்டை, ஏரி ஆகியவை புத்துயிர்பெறும். வேளாண்மை செழிக்கும்.
+3 மேலும்...
🏥
23 வாக்குறுதிகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

1. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.
2. கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
+21 மேலும்...
👩
14 வாக்குறுதிகள்

மகளிர் மேம்பாடு

1. இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும்.
2. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
+12 மேலும்...
👶
10 வாக்குறுதிகள்

குழந்தைகள் பாதுகாப்பு

1. பள்ளியில் இடைநிற்றல் இல்லா (Zero Dropout Tamil nadu) மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம்.
2. குழந்தைகள் பாதுகாப்பிற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு குழந்தைநலத் தமிழ்நாடு உருவாக்கப்படும்.
+8 மேலும்...
🧑
2 வாக்குறுதிகள்

இளைஞர் நலன்

1. முதல்வர் படைப்பகம் (Co-working Space/Start-up & Competitive Exam guidance /Library): சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
2. தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள், முதல்வர் படைப்பகங்கள் ஆகியவை போட்டித்தேர்வு பயிற்சி மையங்களாகவும் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்காக UPSC, SSC, RRB போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நமது இளைஞர்கள் வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு உயர்தரப் பயிற்சி வழங்கப்படும்.
🧓
3 வாக்குறுதிகள்

முதியோர் நலன்

1. முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்கு அன்புச்சோலைகள் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும்.
+1 மேலும்...
7 வாக்குறுதிகள்

மாற்றுத்திறனாளிகள் நலன்

1. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு குறிப்பிட்ட நாளில், அனைத்துச் சிறப்பு மருத்துவர்களும் ஒரே இடத்தில் மாற்றுத்திறனாளி மருத்துவப் பயனாளிகளைப் பரிசோதனை செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.
2. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதைத் தொடர்ந்து தொகுத்து வழங்கும் அமைப்பு உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் திறனும் - கல்வித் தகுதியும் பதிவு செய்யப்பட்டு பெருநிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதை எளிதாக்கும் அமைப்பாக இது செயல்படும்.
+5 மேலும்...
🏳️‍⚧️
3 வாக்குறுதிகள்

திருநர், திருநங்கையர் நலன்

1. மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் திருநர் திருநங்கையர் நலவாழ்வுக் குழு (TWC - Transgender Welfare Committee) அமைக்கப்படும்.
2. மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் திருநங்கையர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவர்.
+1 மேலும்...
🌿
10 வாக்குறுதிகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

1. 2030-ஆம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற தகுதியுள்ள ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களிடையே பள்ளி இடைநிறுத்தம் இல்லாத நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்குத் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
+8 மேலும்...
📋
5 வாக்குறுதிகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

1. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்.
2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உயர்கல்வியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெறுவதை ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் துவங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியரின் பயணச் செலவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். அயலகக் கல்வி வாய்ப்புகளில் சமூகநீதியை நிலைநாட்டுவோம்.
+3 மேலும்...
🤲
10 வாக்குறுதிகள்

சிறுபான்மையினர்

1. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
2. சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
+8 மேலும்...
⚒️
17 வாக்குறுதிகள்

தொழிலாளர் பாதுகாப்பு

1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் மற்றும் இதரப் பல்வேறு நலவாரியங்கள் மூலம் மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1200-லிருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரண நிதி 5,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
+15 மேலும்...
👨‍💼
6 வாக்குறுதிகள்

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்

1. திராவிட மாடல் அரசால், கடந்த 3.1.2026 அன்று அறிவிக்கப்பட்ட "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஓய்வுபெறும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், 50 விழுக்காடு ஊதியம் ஓய்வூதியமாகவும், அத்துடன் இதர ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
2. ஒன்றிய அரசு எட்டாவது ஊதியக் குழுவை மாண்புமிகு நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களின் தலைமையில் அமைத்துள்ளது. இதன் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தியவுடன், அவற்றை மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்துவதற்கான உரிய குழு அமைக்கப்படும். இந்த ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும்.
+4 மேலும்...
🏪
6 வாக்குறுதிகள்

வணிகர் நலன்

1. வணிக உரிமங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர (Single Window) முறையில் அளித்து, புதிய வணிக உரிமங்கள் பெறுவதும், புதுப்பித்தலும் எளிமைப்படுத்தப்படும்.
2. வணிக உரிமம் பத்து ஆண்டுகளுக்கான உரிமமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
+4 மேலும்...
🛡️
4 வாக்குறுதிகள்

காவல்துறை

1. காவல்துறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்கப்படும்.
2. சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் வகையில் கட்டப்படும் காவல் குடியிருப்புகளில் நூலகம் மற்றும் சமூகநலக்கூடம் அமைக்கப்படும்.
+2 மேலும்...
📰
5 வாக்குறுதிகள்

பத்திரிக்கையாளர் நலன்

1. பத்திரிக்கையாளர்கள் பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டால், அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 3.5 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
2. பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.
+3 மேலும்...
🧵
16 வாக்குறுதிகள்

நெசவாளர் நலன்

1. கைத்தறி நெசவாளர் முதியோர் மாதாந்திர ஓய்வூதியம் 1,200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
2. செயல்பாடின்றி உள்ள தறிகளை நவீனப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொணர்ந்து புதிய நெசவாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
+14 மேலும்...
📚
16 வாக்குறுதிகள்

பள்ளிக்கல்வி

1. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை வழங்கப்படும் காலை உணவு, எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படும். இதன்மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
2. இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதை ஏற்காத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டை சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் போக்கினை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்.
+14 மேலும்...
🎓
29 வாக்குறுதிகள்

உயர்கல்வி

1. பொருளாதாரத் தடையை நீக்கி அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.
+27 மேலும்...
🔧
9 வாக்குறுதிகள்

திறன் மேம்பாடு

1. உயர்கல்வி மாணவர்கள் திறன் பயிற்சி ஊக்க உதவித்தொகை: தமிழ்நாட்டில் உயர்கல்வி முடித்தபின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன்பயிற்சி மேற்கொள்ள முன்வரும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு 6 மாத பயிற்சி ரூ.1500 உதவித் தொகையுடன் வழங்கப்படும்.
2. 2030-ஆம் ஆண்டிற்குள் 50 இலட்சம் நபர்களுக்குக் கீழ்க்கண்டவாறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்: அ) நான் முதல்வன் 2.0 திட்டத்தின்கீழ் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் 25 இலட்சம் மாணவர்கள். ஆ) வெற்றி நிச்சயம் 2.0-கீழ் உயர்கல்வியினை முழுமை செய்யாத வேலைவாய்ப்பினை எதிர்நோக்கி இருக்கும் 5 இலட்சம் இளைஞர்கள்…
+7 மேலும்...
🤖
5 வாக்குறுதிகள்

செயற்கை நுண்ணறிவு

1. செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி மற்றும் அதன் போக்குகளை ஆராய்ந்து, வேலையிழப்பு நேரும் துறைகள் எவை என அடையாளம் கண்டு, அத்துறையினருக்கு மாற்றுப் பயிற்சியினை போர்க்கால அடிப்படையில் அளிப்பது சமூகநீதி அரசின் கடமை. இத்தகைய சூழலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு 'தமிழ்நாடு Al Mission 2.0' செயல்பட வழிநடத்தும்.
2. செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் புயல்வேக மாற்றங்களை உருவாக்கும் என்ற கணிப்பு இருக்கிறது. நமது பள்ளிகளில் வகுப்பறைகள் இயங்கும் விதமும், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோய் கண்டறியும் விதமும், சாலைகளில் இயங்கும் போக்குவரத்து விளக்குகளின் (Traffic Lights) கட்டுப்பாட்டு முறைகளும், வேளாண்மை ஆலோசனைகள் வழங்கும் முறைகளும், நீர் மேலாண்மை தொடங்கி அனைத்து மேலாண்மை முறைகளும் பெரும் மாற்றங்களை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தப் பேராற்றலை ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு மக்களின் நலனை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், அரசு வழங்கும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், ஏதுவான வழிமுறைகளும், அமைப்புகளும் உருவாக்கப்படும். இந்தப் பேராற்றலைப் பயன்படுத்தத் தேவையான மனிதவள ஆற்றலை உருவாக்குதல் முதல் படியாகும். இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
+3 மேலும்...
💻
4 வாக்குறுதிகள்

தகவல் தொழில்நுட்பம்

1. 2030-ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், பிளாக்செயின், அனிமேஷன் காட்சி விளைவு விளையாட்டு விரிவாக்கப்பட்ட நிழற்பார்வை தொழில்நுட்பங்கள் (AVGC - XR) இயக்கத் தொழில்நுட்பம் (Mobility Tech) மற்றும் மின்சார வாகன மென்பொருள் போன்ற துறைகளில் சிறப்பு புதுமை வளாகங்களுடன் கூடிய ஆறு மண்டல தொழில்நுட்ப வளாகங்கள் உருவாக்கப்படும்.
2. 2030-ஆம் ஆண்டிற்குள் சென்னை நகரத்தை உலகளாவிய அனிமேஷன், காட்சி விளைவு, விளையாட்டு மற்றும் முழுமையான அனுபவத் தொழில்நுட்பங்களின் சிறப்பு மையமாக நிலைநிறுத்தும் நோக்கில் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
+2 மேலும்...
🌳
15 வாக்குறுதிகள்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்

1. காலநிலை மாற்றத்தால் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களைக் காத்திட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
2. வெப்ப அலையை மாநிலத்திற்குரிய பேரிடராக அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் மாவட்ட வெப்ப அலுவலர்கள் நியமிக்கப்படுவர். குளிர்விப்பு முகாம்களை இயக்குதல், வட்டார அளவில் வெப்ப எச்சரிக்கைகளை வெளியிடுதல்…
+13 மேலும்...
🏭
29 வாக்குறுதிகள்

தொழில் வளர்ச்சி

1. ரூ. 18 இலட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும். தமிழ்நாடு, இந்தியாவின் முதன்மையான பொருளாதாரமாக உருவாகும்.
2. "Make In Tamil Nadu" ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர்பெற, மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா, ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு, பொது வசதி மையம் ஆகியவை இருப்பது உறுதி செய்யப்படும்.
+27 மேலும்...
🏢
24 வாக்குறுதிகள்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

1. MSME துறைதான் அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் திறனுள்ள துறையாகும். இதனைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படும் MSME குழுமங்களை நவீனப்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தப்படும். புதிய தொழில்நுட்பங்கள் மேம்பாட்டு மானியம் வழங்கி இத்துறை விரைந்து வளரவும் வலுப்பெறவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
2. மாறிவரும் தொழில்நுட்பத்தை MSME துறையில் இயங்கும் நிறுவனங்களும் கைக்கொள்ளும் வண்ணம் அதற்கான ஆலோசனைகள் வழங்கவும் பயிற்சி அளித்திடவும் ஒவ்வொரு குழுமத்திலும் (Cluster) பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.
+22 மேலும்...
🚀
8 வாக்குறுதிகள்

புத்தொழில் (Startup)

1. தமிழ்நாட்டின் இளைஞர்கள் படித்தபின் வேலையில் அமர்வது மட்டுமல்லாது, அவர்களது கூர்த்த மதியினால் தம்மைச் சுற்றியுள்ள ஏதாவது ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாண முடியும் என்று தோன்றும் தருவாயில் அந்தக் கருத்தை புதிய தொழிலாக வளர்த்தெடுக்கத் தேவையான பயிற்சியை வழங்குவதற்கு மாவட்டம் தோறும் புத்தொழில் பயிலரங்கங்கள் தோற்றுவிக்கப்படும்.
2. தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களைச் செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஈடுபடச்செய்து, பிற துறைகளுக்குத் தேவையான நுண்ணறிவு சேவைகளை வழங்கும் திறன் உருவாக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு பரவலாகும் போது…
+6 மேலும்...
🛕
13 வாக்குறுதிகள்

திருக்கோவில் திருப்பணிகள்

1. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யப்படும்.
2. திருக்கோவில்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 10 கோடி, ரூபாய் 25 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
+11 மேலும்...
✈️
7 வாக்குறுதிகள்

சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள்

1. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை நமது தொல்லியல் கள ஆய்வுகளின் முடிவுகள் உலகிற்கு நிறுவியுள்ளன. இதனால், தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் மரபின் மீதான ஆர்வம் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் தொன்மையை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நேரில் சென்று அறிந்து கொள்வதுடன், கண்டுகளிக்கும் வகையிலும் தொல்லியல் சிறப்பு மிக்க மையங்களில் பண்பாட்டுச் சுற்றுலாத் தொகுப்புத் திட்டம் (Heritage Tour) உருவாக்கப்படும்.
2. தமிழ்நாட்டின் பத்து முதன்மைச் சுற்றுலாத் தலங்களிலும் 100 அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களிலும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
+5 மேலும்...
🏆
19 வாக்குறுதிகள்

விளையாட்டு மேம்பாடு

1. திராவிட மாடல் 1.0 அரசு 19 உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, தமிழ்நாட்டை உலக விளையாட்டு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து தொய்வில்லாது நடத்தி, தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளும் தழைத்தோங்குவது உறுதிசெய்யப்படும்.
2. விளையாட்டுத்துறையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களுக்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் உணவு உறைவிட விடுதிகளில் (Sports Hostels) உள்ள விளையாட்டு வீரர்களின் அறைகள் குளிரூட்டப்பட்ட அறைகளாக மேம்படுத்தப்படும்.
+17 மேலும்...
🐄
11 வாக்குறுதிகள்

கால்நடை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு

1. கால்நடைகள் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்.
2. அனைத்து வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும். இதன்மூலம் செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருவாய் ஈட்டி பயனடைவர். ஆடுகளின் எண்ணிக்கையும் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்படும்.
+9 மேலும்...
🥛
8 வாக்குறுதிகள்

பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு

1. பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைக்கும் வண்ணம் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 5 உயர்த்தப்படும்.
2. ஆண்டுக்கு 1000 சிறிய பால்பண்ணைகளை உருவாக்கிட, அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 பால் பண்ணை தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.
+6 மேலும்...
🐟
12 வாக்குறுதிகள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலன்

1. மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 8,000-இல் இருந்து ரூ. 12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயிலிருந்து 9000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
+10 மேலும்...
🏘️
10 வாக்குறுதிகள்

ஊரக வளர்ச்சி மற்றும் தீவிர வறுமையை ஒழித்தல்

1. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தாயுமானவர் திட்டத்தின் மிக முக்கியப் பகுதியாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைத் தேவையின் அடிப்படையில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் தீவிர வறுமையில் (Ultra Poor) எவரும் இல்லை என்ற நிலையை அடைவோம்.
2. கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கிராமங்கள் வளர்த்தெடுக்கப்படும். கிராமச் சந்தைகள், விளையாட்டு மற்றும் நல வாழ்வுக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். கிராமப்புற நீர்நிலைகளைச் செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களைப் பசுமையாக்குதல், வேளாண் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அரசு செலவில் அதிக பயன்பெறுதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்.
+8 மேலும்...
🏙️
23 வாக்குறுதிகள்

நகர்ப்புற முன்னேற்றம்

1. "உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்" என்ற நோக்கத்துடன் செயல்படுவோம்.
2. மாநகராட்சிப் பகுதிகளில் "Complete Streets" அதாவது நடைபாதை, நிழல் தரும் மரங்கள் என எழில் மிகுந்த சாலைகள் நகரங்களில் உருவாக்கப்படும்.
+21 மேலும்...
🛣️
7 வாக்குறுதிகள்

நெடுஞ்சாலைகள்

1. நவீனச் சாலைத் தொழில்நுட்பம், A.I. கண்காணிப்பு, Intelligent Transport Systems ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் தரம் மேம்படுத்தப்படும். விபத்துகள் குறைக்கப்படும்.
2. புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு, உலகச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் தரத்தில் அமைக்கப்படும்.
+5 மேலும்...
🚌
9 வாக்குறுதிகள்

போக்குவரத்து

1. திராவிட மாடல் அரசின் 'விடியல் பயணம்' திட்டம், தமிழ்நாட்டு பெண்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் புதிதாக நவீன வசதிகளைக் கொண்ட 10,000 புதிய பேருந்துகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.
2. பேருந்துப் போக்குவரத்தால் அதிக நெரிசல் ஏற்படக் கூடிய மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள்/முனையங்கள் (Integrated Bus Terminus) அமைக்கப்படும்.
+7 மேலும்...
🏠
2 வாக்குறுதிகள்

வீட்டுவசதி

1. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 5 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டம், நகர்ப்புற வீட்டு வசதி திட்டம், இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள், மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்டும் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
2. கலைஞர் கனவு இல்லம் திட்டம் தேவைக்கேற்ப பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
📝
11 வாக்குறுதிகள்

நிருவாகத்தில் எளிமை

1. அரசு விதிமுறைகள், சான்றுகள் ஆகியவற்றில் எவை தற்காலத்தில் தேவையற்றவை என்று ஆய்வு செய்து, அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2. அரசு வழங்க வேண்டிய சேவைகளில் மக்கள் சந்திக்கும் குறைபாடுகளை, கோரிக்கை மனுவின் நிலை ஆகியவற்றை ஒரே சாளரத்தின் (Single Window) வழியே எடுத்துக் கூறித் தீர்வுபெறும் நடைமுறை உருவாக்கப்படும்.
+9 மேலும்...
🍚
2 வாக்குறுதிகள்

பொது விநியோகம்

1. ஆண்டுதோறும், புதிய குடும்ப அட்டைகள் முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்படும்.
2. 10,000 நியாய விலைக் கடைகள் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்; தேவைப்படும் இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.
💰
4 வாக்குறுதிகள்

நிதி மேலாண்மை

1. கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தியுள்ள முன்னோடி மக்கள்நலத் திட்டங்களையும், கட்டமைப்புப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவும், இந்தத் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களைச் செயல்படுத்திடத் தேவையான நிதி ஆதாரங்கள் அனைத்தும் சிறப்பான நிதி மேலாண்மையால் உறுதிசெய்யப்படும்.
2. கடந்த 16 ஆவது நிதிக்குழுவின் அறிக்கையின் படியான நிதிப் பங்கீட்டு முறை தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளில் சாதகமாக இல்லாத சூழலிலும், ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் நிலையிலும், தமிழ்நாட்டின் நிதி உரிமைகளை மீட்டெடுத்து நமக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் போராடிப் பெறுவோம்.
+2 மேலும்...
📍
4 வாக்குறுதிகள்

சிறப்புக் கவனப் பகுதிகள் வளர்ச்சித் திட்டம்

1. மின்னணு மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, தொழிற்பூங்காக்கள் அமைப்பு, வேலைவாய்ப்புகளைப் பெருக்கக் கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தி, காய்கறி, கனிவகைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான உட்கட்டமைப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, I.T. பூங்காக்கள் மற்றும் முழுமையான குடிநீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்;
2. தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க விரைவுச் சாலைகள் அமைத்தல், திருச்சியில் ஏற்றுமதிக்கு தேவையான உலர் துறைமுகக் கட்டமைப்பு (Dry Port). தூய்மை காவிரித் திட்டம்-2030 செயலாக்கம், ஒருங்கிணைந்த சுற்றுலா மேலாண்மைத் திட்டங்கள், வேளாண்மைக்கான நீராதார உட்கட்டமைப்பு தீவிர மேம்பாடு, கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்;
+2 மேலும்...
1 வாக்குறுதி

சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம்

1. மின் மோட்டார் உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, நெசவு, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வளர்ச்சி கண்டுவரும் மேற்கு மாவட்டங்களில் தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சி அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் நகர்ப்பகுதிகள் மேம்பாடு, நவீன முறையில் உயர் தொழில்நுட்ப நிறுவன முதலீடுகளை ஈர்த்தல், நவீன திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள், பல்வேறு வகை ஜவுளி ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்புகள், புதிய ஜவுளித் தொழில்நுட்பத்துடன் ஜவுளித் தொழிலை நவீனமயமாக்குதல், மாவட்டங்கள் சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான சிறப்புக் குழுமங்கள் அமைத்தல் மற்றும் கடனுதவி ஏற்பாடுகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் தொழில்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு சிறப்புப் பெருந்திட்டம் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
3 வாக்குறுதிகள்

துறைமுகங்கள்

1. துறைமுகம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 3 புதிய சிறு துறைமுகங்கள் (Minor Ports) அமைக்கப்படும்.
2. துறைமுகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். துறைமுகங்களின் இணைப்புகளும் மேம்படுத்தப்படும்.
+1 மேலும்...